கிரிக்கெட் சரித்திரத்தின் முக்கிய பங்காக முதலாவது பகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டு டிசம்பர் முடிவில் அல்லது அடுத்தாண்டு ஆரம்பத்தில் இந்த டெஸ்ற் போட்டி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ற் போட்டிகளில் பங்குபற்றவுள்ள நிலையில், அந்த டெஸ்ற் போட்டிகளில் ஒன்றே பகலிரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பகலிரவு டெஸ்ற் போட்டிகளுக்கு இதுவரை எந்தக் கிரிக்கெட் சபையும் முயற்சிகளை மேற்கொள்ளாத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன்படி இலங்கைக்கெதிரான 3 டெஸ்ற் போட்டிகளில் ஒரு போட்டியை பகலிரவுப் போட்டியாக நடாத்துவதற்கான ஒப்புதலை இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளது.
இந்தக் கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக் கொள்ளுமாயின் முதலாவது பகலிரவு டெஸ்ற் போட்டியில் விளையாடிய பெருமையை இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பெற்றுக் கொள்ளும்.
இலங்கை கிரிக்கெட் சபைத்தலைவர் ஜெயந்த தர்மதாசவின் கருத்தின் படி பகலிரவு டெஸ்ற் போட்டிகள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆர்வத்துடன் காணப்படுவதாகவும், பாரிய தடையேதும் ஏற்படாமல் இருப்பின், குறித்த தொடரில் ஒரு பகலிரவு டெஸ்ற் போட்டியில் பங்குபற்றுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தின் நிறமும், பந்தின் வகை தொடர்பாகவே கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment