Thursday, November 28, 2013

பூமி மட்டுமல்ல... எந்த உலகமும் பெண்களின் விழி ஈர்ப்பு விசையால் மட்டும் சுழல்கிறது என்பதே... 'இரண்டாம் உலகம்!’


ஓர் உலகத்தில்  ஆர்யா - அனுஷ்கா இருக்கிறார்கள். அவர்களிடையே காதல். இன்னோர் உலகத்திலும்  ஆர்யா, அனுஷ்கா இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடையே மோதல். இரண்டாம் உலகத்தின் 'அம்மா’ கடவுள், பூமியின் ஆர்யாவைக் கடத்தி, அந்த உலகத்தில் காதல் பூ பூக்கவைக்க முயற்சிக்கிறார். பூ பூக்கிறதா என்பது... சீரியஸ் சினிமா!

aryainside

'ஆசம்’ காதல் சினிமாக்களைக் கொடுத்த செல்வராகவனிடம் இருந்து இப்படியோர் 'ஆவ்வ்வ்’ சினிமாவா? இரு உலகங்களுக்கான ஃபேன்டஸி லாஜிக்குகளை நம்பும்படி பதிய வைத்து, வித்தியாசமான உணர்வுகளுடன் ஆர்யா-அனுஷ்காவை இரு உலகங்களிலும் உலவவிட்டு சுவாரஸ்ய லீட் எடுத்திருக்கிறார். ஆனால், 'பூமி’ ஆர்யா அந்த உலகத்துக்குச் சென்றதும், கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு மற்றும் இன்னும் பிற சங்கதிகள் அனைத்தும், 'டோட்டல் டமேஜ்!’


'அவனுக்கு உதடு கொஞ்சம் பெருசு... நல்லா கிஸ் அடிக்கலாம்’ - அனுஷ்காவின் துடுக்குத் தோழி, அனுஷ்காவின் கோபத்தைச் சமாளிக்க பேராசிரியையிடம் காதல் சொல்லும் ஆர்யா, மோதலுக்கு நடுவே காதல் முளைத்து முத்தம் கொடுக கும் அதிரடி அனுஷ்கா, 'உன்னை அயிட்டம்னு நினைச்சுட்டான்’, 'என்னை மாதிரியே இருக்கிறதால, அவளை மடக்க பாக்குறியா’,'அவளுக்குத்தான் உன்னைப் பிடிக்காதே!’  என ஆங்காங்கே செல்வா டச். வானத்தில் மட்டும் கிராஃபிக்ஸ் செய்த வெளிநாட்டு விவசாயக் கிராமம் போல இருக்கிறது அந்த இரண்டாம் உலகம். அங்கும் தமிழ் பேசுகிறார்கள் என்பது சந்தோஷமே. ஆனால், ஆண்-பெண் மோதல், கள் வெறி, அரசனின் அராஜகம், அந்தப்புர மோகினிகள் என பூமியின் அரதப்பழசான ஜெராக்ஸாகவே அந்தக் கிரகமும் இருக்குமா என்ன?


இரண்டு பாத்திரங்களில் 'பூமி’ ஆர்யா மட்டுமே வசீகரிக்கிறார். அமைதி ரியாக்ஷன், அதிரடி ஆக்ஷன் என வெரைட்டி வித்தியாசம் காட்டுகிறார் அனுஷ்கா. இரண்டு உலகங்களை இணைக்கும் வல்லமைகொண்ட 'அம்மா’ கடவுள்தான் படத்தின் பாத்திரங்களிலேயே மிகவும் பரிதாபமான கேரக்டர்.


அனுஷ்கா ரத்தம் சிந்திய இடத்தில் 'இரட்டை இலை’ பூப்பதும், தெய்வத்தின் பெயர் 'அம்மா’ என்று இருப்பதும்... எதுவும் பாதுகாப்புக் குறியீடா?


ஹாரிஸ் இசையில் 'கனிமொழியே...’, 'மன்னவனே...’ மனம் வருடும் மென்மெலடிகள். வண்ணமயமான இரண்டாம் உலகத்தைக் கொஞ்சமேனும் நம்பவைப்பது ராம்ஜியின் ஒளிச்சிதறல் ஒளிப்பதிவுதான்.


எந்த உயிர்ப்பும் இல்லாத இரண்டாம் உலகக் காதலாலும், ஸ்தம்பித்து நிற்கும் திரைக்கதையாலும் இரண்டாம் உலகத்தின் ஒவ்வொரு நிமிடமும், 'சேம் பிளட்!’


புதிய களம், புதிய கதை... எல்லாம் ஓ.கே. செல்வா. ஆனால், கற்பனை வறட்சி தாண்டவமாடும் திரைக்கதை, அந்த உலகத்தைவிட்டே துரத்தியடிக்கிறதே!

Posted by V4Tamil .com on 3:36 AM in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search