இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ள ஊழல் குற்றம் சாட்டப் பட்டுள்ள அதிகாரிகளை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்தியா ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக்கப் படக் கூடும் என எச்சரித்துள்ளார் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பதவியில் இருப்பவர்களே ஊழலில் ஈடுபட்டு நாட்டின் பெயரை சர்வதேச அளவில் பாழ்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ஒலிம்பிக் சங்கத்தில் நடைபெற்ற ஊழலால், ஒலிம்பிக் போட்டிகளில் இருந்தே இந்தியா வெளியேற்றப்படும் நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான தாமஸ் பச், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ள ஊழல் கறை படிந்த அதிகாரிகள் வெளியேற்றப்படாவிடில் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக்கப்படக்கூடும். வரும் செவ்வாய்க் கிழமைக்குள் நல்ல நிர்வாகத்திற்கான விதிமுறைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் சமர்ப்பிக்கத் தவறினால் அவர்களின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்' என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இது கொள்கைகள் பற்றிய விஷயம். நல்ல நிர்வாகம் என்பதுதான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முக்கிய கொள்கையாகும். இதில் நாங்கள் உறுதியாக இருக்க விரும்புகின்றோம்' எனத் தெளிவு படுத்தியுள்ளார்.
இதேபோல், இனவெறிக் கொள்கைகளைக் காரணம் காட்டி, கடந்த 40 வருடங்களுக்கு முன்னால் தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவது தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, இந்திய ஒலிம்பிக் குழு இன்று டெல்லியில் கூடி சர்வதேச கமிட்டியின் உத்தரவை எதிர்கொள்ளும்விதத்தில் தங்களின் அரசியலமைப்பைத் திருத்துவது குறித்த ஆலோசனையை மேற்கொள்ள உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படாவிடில், லாசேனில் செவ்வாயன்று கூடும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு இந்தியக் கமிட்டியின் அங்கீகாரத்தை ரத்து செய்யப் பரிந்துரைக்கும் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment